‘உங்களுக்கு சொத்தெல்லாம் சேர்த்து வைக்க முடியாதுப்பா… பதிலா எவ்வளவு முயற்சி செய்தாவது உங்களை படிக்க வைச்சுடறேன்…’ இவை என் அப்பா சொன்ன வார்த்தைகள். இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கும் சொற்கள்.
1951ம் ஆண்டு திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் பிறந்தேன். அப்பா, கிருஷ்ணசாமி. அம்மா, சரஸ்வதி. அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. எனக்கு ஐந்தரை வயதாகும்போது இன்சோம்னியா பிரச்னையால் அம்மா காலமாகிவிட்டார்.
உடனே மறுமணம் செய்து கொண்டு எங்களை ஊரில் விட்டுவிடும்படி உறவினர்கள் அப்பாவிடம் சொன்னார்கள். அவர் மறுத்துவிட்டார். தனி ஆளாக எங்களை வளர்த்து ஆளாக்கினார். நல்ல கல்வி எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சென்னைக்கு மாற்றலாகி எங்களை அழைத்து வந்தார்.
முதலில் வட சென்னை. பிறகு தி.நகர். அங்கு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எங்களை அப்பா சேர்த்தார். சமையல் உட்பட வீட்டு வேலைகள் அனைத்தையும் அப்பாவே செய்வார்.ராஜகோபால், சுந்தர் என இரண்டு அண்ணன்கள், சகுந்தலா என ஒரு அக்கா, குமார் என ஒரு தம்பி என நாங்கள் மொத்தம் ஐந்து பேர்.
அது இந்திய – சீன யுத்த நேரம். உணவு, எரிபொருள் என எல்லாமே தட்டுப்பாடு. ரேஷன் கடையில் வரிசையில் நின்றுதான் சர்க்கரை, மண்ணெண்ணெய் உட்பட எது ஒன்றையும் வாங்க முடியும். தண்ணீரையும் அடி பம்ப்பில் அடித்துதான் பிடிக்க வேண்டும்.
காலையில் 10 மணிக்கு ரேஷன் கடையைத் திறப்பார்கள். ஆனால், அதிகாலை நான்கு மணி முதலே வரிசையில் மக்கள் நிற்கத் தொடங்கி விடுவார்கள். காப்பித்தூள், சீயக்காய்த்தூள் உட்பட சகலத்தையும் அரைத்துதான் வாங்க வேண்டும். அப்போது அதிகாலை நான்கு மணிக்கு எழ ஆரம்பித்த பழக்கம் இப்போதும் தொடர்கிறது.
ஒருகட்டத்தில் அக்கா மணமாகி புகுந்த வீடு சென்றார். இரு அண்ணன்களும் மேல் படிப்பில் மும்முரமாக இருந்தார்கள். வீட்டில் அப்பா, நான், தம்பி என மூன்றே பேர். காலையில் நான் சமைப்பேன். மாலையில் தம்பி சமைப்பார். இப்படியாக சிறு வயதிலேயே நானும் தம்பியும் சமைக்கக் கற்றுக் கொண்டோம். பெண்கள்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலை எங்கள் வீட்டில் இருந்ததே இல்லை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம்.
ரேஷன் கடையில் வாங்க வேண்டியதை வாங்கி வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்வேன். மாலை வீட்டுக்கு வந்ததும் அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள் உட்பட பொருட்களை வாங்குவேன். இதனால் சிறுவயதிலேயே எனக்கு பொறுப்பு வந்துவிட்டது!பொழுதுபோக்கு என்றால் அது புத்தகங்கள் படிப்பதுதான். வார, மாதப் பத்திரிகைகளை அப்பா வாங்க மாட்டார். செய்தித்தாள்களும் சிறுவர்களுக்கான புத்தகங்களும்தான் வாங்கி வருவார்.
வாசிப்புப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டது. நூலகங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தேன். அரசியல் புத்தகங்களைப் படிக்க பிடித்தது. ஊரில் நடந்த அரசியல் கூட்டங்களுக்கு செல்லத் தொடங்கினேன். அரசியல் மேடைகளுக்கு முன்னால் இரவு முழுக்க உட்கார்ந்து விடுவேன். வீட்டில் திட்டு விழும். ‘சோறு கிடையாது… கதவைத் திறக்க மாட்டோம்’ என வாசலிலேயே உட்கார வைத்து விடுவார்கள்!
அதனால் என்ன… அரசியல் கூட்டங்களில் பிரமாதமாக உணவு போட்டார்கள்..! கூட்டங்களுக்கு செல்வதும் தொடர்ந்தது. சில கூட்டங்களில் உணவு போட மாட்டார்கள். பட்டினி கிடக்கத் தயார் என சென்றுவிடுவேன்!இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோது ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்றிருக்கிறேன். திமுக மீது ஈடுபாடு அதிகரித்தது.
அறிஞர் அண்ணா தேர்தலில் நின்றபோது பூத் ஸ்லிப் கொடுக்கும் பணியை மேற்கொண்டேன். சுருக்கமாக சொல்வதென்றால் அப்போது நடந்த அனைத்து மாணவர் போராட்டங்களிலும் பங்கேற்றேன். இக்காலங்களில் இடதுசாரிகள் அறிமுகமானார்கள். தொழிற்சங்கங்களுடன் நட்பு ஏற்பட்டது.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பையும் நான் விடவில்லை. மெடிக்கல் படிக்க விரும்பினேன். அப்போது நுழைவுத் தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வுதான். பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும். எனவே லயோலாவில் பி.எஸ்ஸி தாவரவியல் சேர்ந்தேன். எனது அரசியல் நடவடிக்கைகளை அறிந்த கல்லூரி நிர்வாகம் இரண்டாம் வருடத்தில் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்!
வேறொரு கல்லூரியில் சேர்ந்து டிகிரி முடித்தேன். இந்த வேளையில் அப்பாவின் இறப்பு நிகழ்ந்தது. இரு அண்ணன்களும் வெளியூரில் வேலையில் இருந்தார்கள். தம்பி சிறுவன் என்பதால் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தேன்.ஆக, தனி ஆள். முழுமையாக அரசியல், சிறை என நாட்கள் கழிந்தன. ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி என்னைப் பார்த்து, ‘நீ படிக்கணும்… சட்டம் படிச்சு வக்கீலாகு… உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்…’ என்றார்.
எனக்கும் அது சரியென்று தோன்றவே கல்லூரியில் சேர்ந்து சட்டம் படிக்கத் தொடங்கினேன். நாள் தவறாமல் கல்லூரிக்குச் சென்றேன். சின்சியராக படித்தேன், பாஸானேன். மார்க்சிஸ்ட் கட்சியின் அடையாளம் வேறு என்னுடன் ஒட்டிக் கொண்டது! முறையாக பயிற்சி எடுத்து 1976ல் வழக்கறிஞரானேன். அது மிசா காலம். சிறைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளைப் பதிவு செய்து வழக்கு தொடுக்கச் சென்றேன். இப்போது திமுகவின் தலைவராக இருக்கும் ஸ்டாலினை அங்கு சிறையில் சந்தித்தேன்.
மார்க்சிஸ்ட் கட்சி நபர்களுக்காக நான் ஆஜர் ஆனேன். ஜூனியர் வக்கீலாக பொதுநல வழக்கு தொடுத்தேன். என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்தடுத்து பல பொதுநல வழக்குகளைத் தொடுத்தேன்.1968 முதல் 1988 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் நபராக இருந்த நான் திடீரென்று ஒருநாள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அதன்பிறகு வழக்கறிஞர் தொழிலில் முழுக் கவனமும் செலுத்தினேன். தொடர்ச்சியாக வழக்குகள். எல்லாமே சமூகப் பிரச்னைகள் சார்ந்தது.
இதனால் வக்கீல்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு கிடைத்தது. பார் கவுன்சில் நபராக என்னை அறிவித்தார்கள். அனைவரும் அறிந்த வக்கீலாக மாறினேன். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து வாதாடினேன். எனது செயல்பாடுகள் குறித்து தனது புத்தகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட அனைத்து கட்சிக்காரர்களுக்காகவும் வாதாடியிருக்கிறேன். இலங்கை அகதிகளுக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். இதற்குள் சீனியர் வக்கீலாக வளர்ந்திருந்தேன். தினமும் வேலை. என்னை வெற்றிகரமான வழக்கறிஞராக உலகம் பார்க்கத் தொடங்கியது. 1996ல் எனக்கு திருமணம். அது சாதி மறுப்பு காதல் மணம்.
அவர்கள் பெயர் பாரதி. பச்சையப்பன் கல்லூரியில் அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர்.பாரதியின் வருகைக்கு பிறகுதான் மறுபடியும் எனக்கு குடும்பம் வந்தது. பொறுப்புகளும். தான்தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. எங்களுக்கு கீர்த்தி என்று ஒரு மகள். பொருளாதார ரீதியாக ஓரளவு நல்ல நிலை. என்றாலும் பணத்துக்காக எந்த வழக்கையும் நான் எடுத்து நடத்தியதில்லை. ஏழைகளுக்காகவே அதிகம் வாதாடி இருக்கிறேன்.
இந்நிலையில் அப்போது நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். அதை ஏற்று இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தேன். ‘இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்’ என்று சொல்லி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.
2006ல் ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதை காரணம் காட்டி நீதிபதி பொறுப்பை கொடுக்காமல் இருக்க முடியாது’என உச்சநீதிமன்றம் சொல்லி என்னை நீதிபதியாக நியமித்தார்கள். நீதிபதியாக நான் பணியில் இருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறேன். இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் தீர்ப்பு சொன்னதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான்… அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ என எழுதியிருக்கிறார்.
நான் அமர்ந்தால் எந்த வாய்தாவும் கிடையாது. தீர்ப்புதான். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட டிக்டேஷன் செய்வேன். ‘சந்துருவுக்கு மட்டும் வாரத்துக்கு 8 நாள்’ என வி.ஆர்.கிருஷ்ணய்யர் கிண்டலடிப்பார். நீதிபதிகளுக்கு பாதுகாப்புக் காவலர் கொடுப்பது வழக்கம். எனக்கு அப்படி யாரும் வேண்டாம் என எழுதிக் கொடுத்தேன். மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. கார் கூட பயன்படுத்த மாட்டேன். பெரும்பாலும் பஸ், ரயில்தான்.
பதவிக்கு வந்ததுமே என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன். பல சீனியர்கள் இதனால் கோபம் அடைந்தார்கள். கடைசியில் அனைவரும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வந்தது.மகள் கீர்த்தி பல் மருத்துவராக இருக்கிறார். ‘ஒருவேளை நான் வழக்கறிஞராகி சுமாராக இருந்தால்… ‘என்ன, சந்துரு மகளா இருந்துட்டு இப்படி சுமாரா இருக்க’ என்ற பேச்சு வரும். அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ என கீர்த்தி சொல்லிவிட்டார். என் நிழலில் வாழாமல் அவர் தன் துறையில் முன்னேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு, என் மனைவிக்கு, மகளுக்கு எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது கல்விதான். எங்களுக்கு மட்டுமில்லை… என் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் கூட நல்ல வாழ்க்கையை கொடுத்திருப்பது கல்விதான். நாம் மேற்கொள்ளும் பணியை எந்தளவுக்கு சின்சியராக மக்கள் நலன் சார்ந்து செய்கிறோமோ அந்தளவுக்கு சமூகத்தில் நமக்கு பெயர் கிடைக்கும். என் வாழ்க்கை எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.
ஓய்வுக்குப் பிறகு இன்றும் தினமும் படிக்கிறேன். படித்த நூல்களை லாரியில் ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். இப்போது நடைபெறும் வழக்குகள் சார்ந்து என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். அந்த வகையிலேயே சமீபத்தில் மிசாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என அவதூறு கிளம்பியபோது அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். மனித உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் குரல் கொடுப்பேன்..!
குங்குமம் ஸ்பெஷல்29 Nov 2019
Uncategorized
வீரமிக்க /உணர்ச்சி பொங்கும் இந்துக்களும்/இந்துமத பாதுகாவலராக பீற்றும் பா.ஜா.க.வினருக்கு கீழ்வரும் சவாலை தீர்க்க போராடுவார்களா
பாவம் கபாலீஸ்வரர் மூலப்பத்திரம் தேடுகிறார்.
மயிலை (சென்னை) கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ,குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் “இந்து விரோதிகள்” பட்டியலை அக்கோவிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். இந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள் நாடார்கள் தவிர பெரும்பான்மையோர் அய்யர்,அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல் பெரியது.
வாடகை கொடுக்காத இந்து விரோத பிராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும், காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் மீதான தடையை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியவருமான கே.எம். முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பாரதிய வித்யாபவன். இதன் முக்கிய தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியை பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்எஸ் ஆர்எஸ்எஸ் பினாமி நிறுவனம் கபாலீஸ்வரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 லட்சம்.
அடுத்து மயிலாப்பூர் கிளப். ஜனவரி 1, 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெரும் பணக்காரர்களின் தனி உடமை கிளப்பான இது, 3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளராக கொண்டது. பின்னர் இதன் தலைவரானர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டு மேட்டுக்குடி குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித்திடல், உறுப்பினர்களுக்கு சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்திய, தென்னிந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணிநேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என, பல கிரவுண்ட் கோவில் நிலத்தை குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.5 7 கோடி ரூபாய்.
“தேசிய தலைவர்” என “பெத்த பேரு” வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வரராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிர்தாஞ்சன் நிறுவனம் கபாலீஸ்வரர் வைத்திருக்கும் குத்தகை பாக்கி 6 கோடியே 45 லட்சம்.
கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் போனதாக பெருமையாக கொள்ளப்படும் பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் மேல்நிலைப்பள்ளி, கோவிலுக்கு சொந்தமாக 76 கிரவுண்ட் நிலத்தை 1928-ல் குத்தகை எடுத்து, பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்க பட்டிருக்கிறது. ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ 5 கோடிக்கு மேலாகும்.பல பிரபல உயர் அதிகாரிகளை உருவாக்கியதாக பீற்றிக்கொள்ளும் இந்த பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாகரூ .1250 ஐ மட்டும் ஒரே ஒரு முறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு விட்டுக் கொண்டிருக்கிறது.
காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீஸ்வரருக்கு சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடிக்கு மேல். 1901-இல் 99 வருட குத்தகை எடுத்து ஐயங்கார் , இதனை உள் குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உட்பட கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படி போகிற பட்டியல்முதலை வாயில் சிக்கிய இந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பராமரிப்பு மிக்க மிக பெரிய மனிதர்களின் கிளப்பு என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீஸ்வரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு கபாலீஸ்வரர் சொத்தை திருப்பி கொடுத்து விடுவார்களா என்ன?
அற்ப வாடகை பாக்கிய கூட கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இருப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான். இப்போது புரிகிறதா? “இந்து கோயில்களை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று சங்பரிவார் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது என்று எதற்காக*!!!நன்றி: Manoharan Parasuraman